சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘குபேரா’. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசுகையில் சிரஞ்சீவி, “குபேரா படத்தில் தனுஷ் தவிர வேறு யாரும் அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் மட்டுமே அந்த கதாப்பாத்திரத்தில் முழுமையான அர்ப்பணிப்பை அந்த கதாபாத்திரதிற்கான நியாயத்தை கொடுத்தவர். குறிப்பாக திருப்பதி காட்சியில் அவர் நடித்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரை அடையாளம் காண முடியவில்லை என்பதளவுக்கு இயல்பாக நடித்திருந்தார். அவர் நடிப்பில் தேசிய விருது பெறும் அனைத்து தகுதியும் இருக்கிறது. அந்த விருது அவருக்குக் கிடைக்கவில்லை என்றால், அதன் மதிப்பு குறையும். தனுஷ் நீங்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடிக்கிறீர்கள். உங்கள் பொறுப்பு மற்றும் திறமை மிக தெளிவாக தெரிகிறது,” என பெருமையாகக் கூறினார்.
மேலும், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோரை தனித்தனியாக பாராட்டினார். விழாவில் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற தனுஷை சிரஞ்சீவி அணைத்து வணங்கி வாழ்த்தினார். ‘குபேரா’ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.