சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் தி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. படம் வெளியான காலத்தில், சிலர் இப்படம் குறித்து அதீதமாக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியதாகவும் செய்திகள் வந்தன. இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

‛ரெட்ரோ’ திரைப்படம் 4 முதல் 5 எபிசோட்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு எபிசோடும் 35 முதல் 40 நிமிடங்கள் கொண்டவை. இது ஆன்மிகம், கல்ட், சிரிப்பு, அதிரடி என பல பரிமாணங்களைக் கொண்ட, உணர்ச்சி மிகுந்த படமாக நீண்ட நேரம் கொண்டதாக உருவாக்கப்பட்டது. ஆனால் இந்திய திரையரங்குகளில் வெளியிடும் வர்த்தக சூழ்நிலையின் காரணமாக இதனை 3 மணி நேரத்திற்குள் சுருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் இப்படம் நீட்டிக்கப்பட்ட பதிப்பாக வெளியானது. அங்குள்ள நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் அதே நீட்டிக்கப்பட்ட பதிப்பு உள்ளது. இந்தியாவில் ஓடிடியில் இதே வடிவத்தில் வெளியிட நான் முயற்சி செய்தேன். ஆனால் ஓடிடி நிறுவனம் அதை மறுத்துவிட்டது. எனவே, படம் வெளியாகி 3-4 மாதங்கள் கழித்து இந்த நீட்டிக்கப்பட்ட பதிப்பை வெளியிட முயற்சித்து வருகிறேன்.
மேலும், திரைப்படங்களுக்கு மற்றவர்களை போகவிடாமல் தடுப்பது சமூக சேவையாக சிலர் கருதுகிறார்கள். எந்த திரைப்படங்களும் பார்ப்பதால் யாரையும் பாதிக்காது. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன, டார்கெட் செய்யப்பட்டு இது நடக்கிறது. திரைப்படங்களை மக்களிடம் விட்டுவிடுங்கள், அவர்கள் முடிவு செய்வார்கள். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான் என கூறியுள்ளார்.