நடிகை சமந்தா கடைசியாக தமிழ் சினிமாவில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், அவர் ‘சாகுந்தலம்’ மற்றும் ‘குஷி’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பிறகு முழுமையாக மீண்டு தற்போது மீண்டும் பாணியில் நடிப்பைத் தொடங்கியுள்ளார்.

தற்போது, அவர் ‘ராக்ட் பிரமானந்த் – தி பிளடி கிங்டம்’ என்ற வெப் தொடர் மற்றும் ‘பங்காரம்’ என்ற புதிய தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார். இயக்குனர் ராஜ் நிடிமொருவுடன் அவர் காதலில் இருக்கிறார், விரைவில் திருமணம் நடைபெறும் என்றெல்லாம் செய்திகள் வலம்வந்தன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா, தனது மனம்திறந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார்: “இரண்டு ஆண்டுகளாக என் படங்கள் வெளிவரவில்லை. வளர்ச்சியும், முதிர்ச்சியும் தான் சுதந்திரம். குறிப்பாக ஒரே ஒரு சுற்றுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது தான் உண்மையான சுதந்திரம் என்பதைக் கண்டறிந்துள்ளேன். முன்பு போல் வெற்றிகள் இல்லையே என என்னைப் பற்றி சிலர் நினைத்துக் கொள்ளலாம், பேசலாம். யாரேனும் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நான் என் வாழ்நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் செய்கிற வேலைகள் எனக்கே மகிழ்ச்சி தருகின்றன. அப்படி இருக்கும்போது மற்றவர்களின் கருத்துகளைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?” என சமந்தா தெரிவித்துள்ளார்.