பிரபல எழுத்தாளரான சத்யராஜ், நடுத்தர மக்களின் உணர்வுகளை மற்றும் அவர்களின் இயற்கையான வாழ்க்கையை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்க விரும்புகிறார். அதற்காக காளி வெங்கட்டின் வாழ்க்கையைத் தேர்வு செய்கிறார். இதன் அடிப்படையில், அவரது பின்னணியும், வாழ்க்கை முறையையும் நேரில் சந்தித்து ஆய்வு செய்து, அதனை ஒரு கதையாக ரசிகர்களுக்கு அழகாகச் சித்தரிக்கிறார். இப்போது அவர் சொல்லும் அந்தக் கதையைப் பார்ப்போம். ஆட்டோ டிரைவராக இருக்கும் காளி வெங்கட், அவரது மனைவி ஷெல்லி கிஷோர், மகள் ரோஷ்னி ஹரிபிரியன் மற்றும் மகன் விஷ்வா ஆகியோருடன் வசித்து வருகிறார். ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவராக, வருமானம் குறைவாக இருந்தாலும், தனது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்பிக்க உறுதியுடன் செயல்படுகிறார். மேலும், தனது நண்பர்கள் மூலமாக ஆலோசனைகள் கேட்டு, குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக சில முயற்சிகளை மேற்கொள்கிறார். அந்த முயற்சிகள் வெற்றியடைந்ததா? காளி வெங்கட் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ன? அவரது மகள் மற்றும் மகன் என்ன செய்தார்கள்? என்பதே படத்தின் மீதமுள்ள கதை.
காலங்கள் மாறினாலும், மனிதர்களின் உணர்ச்சிகள் மட்டும் மாறுவதில்லை. அதனால், மனிதநேயம் மற்றும் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகள் எப்போதும் மக்களிடம் செல்வாக்கு பெற்றே தீருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம், மனித நேயத்தின் முக்கியத்துவத்தை பேசுவதால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேபோல, இந்த ‘மெட்ராஸ் மேட்னி’ படத்திலும் ஒரு நடுத்தர குடும்பத்துக்குள் வாழும் ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு நிகழும் உணர்வுபூர்வமான சம்பவங்களை அழகாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் கார்த்திகேயன் மணி. நடுத்தர குடும்பம் எப்படி மகிழ்ச்சியுடனும் உணர்வுடனும் வாழ்கிறது என்பதை நேரடியாகச் சொல்லாமல், ஒரு எழுத்தாளரின் பார்வையில் அனுபவப்படுத்த வைத்துள்ளார்.
இந்தப் படத்தில் காளி வெங்கட் கதாநாயகனாக, ஒரு ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து காட்டுகிறார். தனது குடும்பமே வாழ்க்கையின் மையம் என எண்ணும் சாதாரண மனிதனின் எண்ணங்களையும், மனநிலையையும் மிக எளிமையாகவும் உணர்வோடும் திரையில் பிரதிபலித்திருக்கிறார். படம் முழுவதையும் தனது தோளில் சுமந்து, சிறு சிறு உணர்வுகள் வழியாக கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இன்றைய காலக்கட்டத்தில் குடும்பத்தலைவிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எவ்வாறு தொய்வின்றி செயல்படுகிறார்கள் என்பதை, தனது கதாபாத்திரத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் மலையாள நடிகை ஷெல்லி கிஷோர். காளி வெங்கட் மகளாக நடித்த ரோஷ்னி ஹரிபிரியன், பொறுப்புள்ள பெண்ணாக தனது பங்களிப்பை சிறப்பாகக் காட்டியிருக்கிறார். ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றினாலும், தனது குடும்பத்திற்கும், தந்தையிடமுமுள்ள பாசத்தை பல காட்சிகளில் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகனாக விஷ்வாவும் நன்றாக நடித்திருக்கிறார்.
இந்தக் குடும்பத்திற்கு வழிகாட்டியாகும் கதாபாத்திரத்தில் சாம்ஸ் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். எழுத்தாளராக சத்யராஜ் மாறி மாறி திரையில் தோன்றுகிறார். கே.சி. பாலசாரங்கனின் இசை இந்தப் படத்திற்கு மிகுந்த உயர்வை வழங்குகிறது. ஆனந்த் ஜி. கே.வின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படம் பிடித்து பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.