நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், “சிதாரே ஜமீன் பர்” படம் தியேட்டரில் வெளியாகிய பின் என்ன நடக்கும் என்பது குறித்து எனக்கு உறுதியில்லை. பலரும் அந்தப் படத்தை ஓடிடி மூலம் வெளியிட பரிந்துரைத்தனர். ஆனால், நான் அனைத்து பரிந்துரைகளையும் மறுத்துவிட்டேன். ஏனெனில், நான் சினிமாவை நம்புகிறவன். சினிமா தான் எனக்கு இந்நிலையை தந்தது. மக்கள் என் படங்களை திரையில் பார்த்ததால்தான் இன்று நான் உங்கள் முன்னிலையில் இருக்கிறேன்.

நான் முட்டாளாக இருக்கலாம். ஓடிடி தளத்துக்கு விற்காமல் தவறு செய்திருக்கலாம். இந்த முடிவால் பெரிய அளவிலான நஷ்டமும் ஏற்படலாம். ஆனால், இவை அனைத்தையும் பின்னாளில் பார்ப்போம். ஒவ்வொரு நாளும் படங்களை திரையில் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதனால், அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதே என் குறிக்கோள். நான் என் ரசிகர்களையும், திரையரங்குகளையும் நம்புகிறேன்.
இப்போது எந்த தயாரிப்பாளரும் ஓடிடி உடன்படிக்கையின்றி படம் தயாரிக்கத் தொடங்குவதில்லை. ஆனால், நான் மட்டும் தான் அந்த விதிமுறையை மீறி, எந்தவிதமான ஓடிடி ஒப்பந்தமின்றி படம் தயாரிக்கிறேன். ஏனெனில், எனக்கு அந்த மாதிரியான வெளியீட்டில் விருப்பமில்லை,” என்று கூறியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஜெனிலியா தேஷ்முக் மற்றும் கோபி கிருஷ்ணா வர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.