அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே 1ம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்த திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் இலங்கையில் வசிக்கும் தமிழர்களான சசிகுமார் மற்றும் அவரது குடும்பம், அங்குள்ள பொருளாதார சிக்கலால் தமிழகத்திற்கு சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர். பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களை நகைச்சுவையும் உணர்ச்சியுடனும் இந்த படம் பதிவு செய்துள்ளது. குடும்பப் பின்னணியிலான கதைக்களத்துடன் வெளிவந்த இப்படம் ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் சசிகுமார் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தைப் பற்றி பேசும்போது கூறியதாவது: “இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்தக் கதையை எனக்கு சொல்லும்போதே என்னை எப்படி வழிநடத்தினாரோ, அந்த வழியேதான் நான் என் கதாபாத்திரத்தை செய்தேன். அதனால் தான் என் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு பாராட்டுகள் கிடைத்தன. மேலும், இயக்குனர் அபிஷன் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தக் கதாபாத்திரம் படத்திற்கு மிகுந்த உணர்வுபூர்வமான வலிமையை தந்தது” என தெரிவித்தார்.