தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் அவர்கள், 75-வது வயதில் சென்னையில் இன்று (மே 29) காலமானார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிறந்தவர் ராஜேஷ். ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர், பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு, சினிமாவில் கால்பதித்து நடிப்பைத் தொடங்கினார். 1974ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் தனது அறிமுகத்தை பதிவு செய்தார். இது அவருடைய முதல் படம் ஆகும். பின்னர் ‘கன்னிப் பருவத்திலே’, ‘அந்த 7 நாட்கள்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்ளிட்ட பல்வேறு முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவருடைய நடிப்பு திறமையை காட்டி, மொத்தம் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா ஏற்கெனவே மறைந்துவிட்டார். அவர்களுக்கு திவ்யா என்ற மகளும், தீபக் என்ற மகனும் உள்ளனர். ராஜேஷின் உடல் தற்போது சென்னையில் உள்ள ராமாபுரம் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்திலும் பெரும் அதிர்ச்சி மற்றும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.