‘பேராண்மை’ திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் தான் சாய் தன்ஷிகா. தஞ்சையில் பிறந்த இவர், சாய்பாபா மீது கொண்ட பக்தியின் காரணமாக தனது பெயரை ‘சாய் தன்ஷிகா’வாக மாற்றிக் கொண்டார். “மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு” உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
தற்போது, கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யோகிடா’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜப்பட்மா சினிமாஸ் நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், பெண்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லரும் இசை வெளியீட்டு விழாவும் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய நடிகை சாய் தன்ஷிகா, “நானும் விஷால் அவர்களும் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறோம். நண்பர்களாக இருந்த நாங்கள் தற்போது காதலர்களாக மாறியுள்ளோம். வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். விஷால் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொள்வார், பல சந்தர்ப்பங்களில் எனக்காக குரல் கொடுத்துள்ளார். அவர் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.