தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் 2015-ம் ஆண்டு வெளியான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘காதலை தேடி நித்யானந்தா’, ‘வெர்ஜின் மாப்பிள்ளை’, ‘பஹீரா’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் இவர் இயக்கிய ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளிவந்து, மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை பார்த்த நடிகர் பாலையாவிற்கு படம் மிகவும் பிடித்ததாம். இதனைத் தொடர்ந்து, அவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை நேரில் அழைத்து, அவரிடம் கதை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், இவர்கள் இருவரும் இணையும் புதிய படம் விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.