‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே, விஜய்யுடன் இணைந்து நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்றார். தற்போது அவர் சூர்யாவுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ‘ருக்மணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய நடிப்புக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் சமமாக வந்துள்ளன.

இந்நிலையில், ஒரு ரசிகர் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பூஜா ஹெக்டேவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இந்த நிறம் வேண்டுமென்றால் உண்மையில் அப்படியிருக்கிற ஹீரோயினை தேர்வு செய்திருக்கலாமே… பூஜா ஹெக்டேவை அவர் இயற்கை நிறத்திலேயே விட்டுவிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நடிகை பிரியா ஆனந்த் சிரிக்கும் ‘எமோஜி’ ஒன்றை பதிலளித்துள்ளார். இதனால், சமூக வலைதளங்களில் “பூஜா ஹெக்டேவை, பிரியா ஆனந்த் கலாய்த்துவிட்டார்” என்றவாறு செய்திகள் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து பிரியா ஆனந்திடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “நோ கமெண்ட்ஸ்” என்று சிரித்தபடி பதிலளித்துள்ளார்.
பூஜா ஹெக்டே தற்போது வருண் தவானுடன் ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹாய்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ என்ற திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.