பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அம்பி’, இதில் ரோபோ சங்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் அஸ்வினி சந்திரசேகர். மேலும் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோகன் வைத்யா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘அம்பி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ரோபோ சங்கர், “சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் போது, ஒரு கலைஞனுக்கு தனித்துவமான இடம் வழங்கப்பட வேண்டியது அவசியம். ‘மாரி’ திரைப்படத்தில் அந்த இடம் எனக்குக் கிடைத்திருந்தது என்பதே இன்று நான் வெள்ளித்திரையில் ஒரு நடிகராக அறியப்படுவதற்கான முக்கிய காரணமாகும். அதற்கு முன்பு என்னை மிமிக்ரி ஆர்டிஸ்ட் எனவே அணுகினார்கள். எனது தனித்துவத்தை வெளிப்படுத்த முடியாமல் நான் சில நேரங்களில் மனவருத்தத்திற்குள்ளாகியிருந்தேன்.
ஆனால் ‘மாரி’ படமே எனக்கு உரிய வாய்ப்பை வழங்கியது. நடிகர் தனுஷ் என் வாழ்க்கையில் முக்கிய நபராக இருந்து, பல விதமான உதவிகளை செய்துள்ளார். அவர் செய்த உதவிகளை மறந்தால் எனக்கு உணவுக்கூட கிடைக்காது. தனுஷ் சாருக்கு நான் செல்லப்பிள்ளை போலத்தான். மிகவும் கடினமான சூழ்நிலையில் எனக்கு துணையாக இருந்தவர் அவர். இன்று நான் சந்தோஷமாக வாழ்கிறேன் என்றால், அதற்கும் அவரும் ஒரு காரணம். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.