மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலின் மகனும், நடிகருமான பிரணவ் மோகன்லால், “ஹிருதயம்” படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பரவலான கவனத்தை பெற்றார். தொடர்ந்து “வர்ஷங்களுக்கு ஷேஷம்” என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துப் பெரும் வெற்றியை பெற்றார். அதே சமயம், மிகக் குறைவான படங்களிலேயே நடிப்பதை விரும்பும் பிரணவ், உலகம் முழுவதும் பயணிப்பதை விரும்பும் நபராக இருக்கிறார்.

எப்போதும் வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டு, அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை அனுபவிப்பது போன்ற பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். பெரும்பாலும் அவர் கேரளாவில் இருப்பது அரிதாகவே காணப்படுகிறது.
இந்த நிலையிலும், “பிரம்மயுகம்” படத்தை இயக்கிய ராகுல் சதாசிவனின் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். “ஒய் நாட் ஸ்டூடியோஸ்” மற்றும் “நைட் ஷிஃப்ட்” நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த ஹாரர் பின்னணியிலான படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 25ஆம் தேதி தொடங்கி, துல்லியமாக ஒரு மாதத்தில் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.