இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என்ற மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பொதுச் சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், தமிழகத்தை சேர்ந்த மூன்று பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில், நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதுகளை அறிவித்தது.
டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு சென்றார். இந்நிலையில், இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி திரவுபதி முா்மு நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதை வழங்கினார்.மேலும் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் பத்ம பூஷன் விருது பெற்றுக்கொண்டார்.