நடிகர்கள் சந்தானம் மற்றும் சூரி கடந்த பல வருடங்களாக நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் இருந்து விலகி, கதாநாயகனாக நடித்துவரும் முயற்சியில் இருக்கின்றனர். குறிப்பாக சூரி, ‘விடுதலை’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

இந்த தொடரில், ‘விலங்கு’ வெப்சீரிஸின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள ‘மாமன்’ திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளதுடன், முக்கிய வேடங்களில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகை சுவாசிகா நடித்துள்ளனர்.
இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ‘மாமன்’ திரைப்படம் வருகிற மே 16ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படமும் வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் சூரி மற்றும் சந்தானம் நடித்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதும் என்பது சிறப்பு கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.