சந்தோஷ்’ என்ற திரைப்படத்தை இந்தியாவில் திரையிடக் கூடாது என்று மத்திய தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்காக சென்ற ஒரு திரைப்படம் ‘சந்தோஷ்’. இந்தியாவில் நடக்கும் சில விஷயங்களை மையப்படுத்தி அந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க மறுத்ததால் அப்படத்தை இந்தியாவில் திரையிடக் கூடாது என்று சொல்லப்பட்டது.இதனிடையே, தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ திரைப்படத்தை சென்னையில் நடைபெற்ற பிகே ரோஸி திரைப்பட விழாவில் திரையிட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்திருந்தனர். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் அத் திரைப்பட விழாவை நடத்தியது.

நேற்று பிப்ரவரி 6 ஞாயிறன்று காலை 9 மணிக்கு திரையிடுவதாக இருந்தது. இந்நிலையில் திரைப்பட விழா நடைபெறும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் கதவில் படத்தைத் திரையிடக் கூடாது என சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதோடு ஏப்ரல் 5ம் தேதி திரையிடுவதாக இருந்த ‘நசீர்’ என்ற திரைப்படமும் திரையிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்றைய நிறைவு நிகழ்ச்சியில் பா ரஞ்சித், “பிரசாத் லேப்ல லைசென்ஸ் கேன்சல் பண்ணுவோம்னு சொல்ற அளவுக்கு அச்சுறுத்தி இருக்காங்க. அது பத்தி ஒண்ணும் பிரச்சனையில்லை. நாம ‘சந்தோஷ்’ படத்தை வெளியில திரையிடலாம். அதை எதிர்கொள்ளவும் நமக்கு சக்தி இருக்கு. நாம ஒண்ணும் அவ்ளோ க்ரைம்லாம் பண்ணல. இதுக்கு க்ரைம் தண்டனைலாம் கொடுப்போம்னு சொல்றாங்க. பரவால்ல, கொஞ்ச நாள் ஜெயில்ல போய் உட்காரலாம். கைதாவதற்கு தயாராக இருக்கிறோம். சந்தோஷ், நசீர் ஒரு நல்ல நாள் சொன்னீங்கன்னா திரையிட்டு காட்டுவோம்,” என கூறியுள்ளார்.