இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் உருவாகவிருக்கிறது. முதல் பாகத்தில் மூக்குத்தி அம்மனாக நடித்த நயன்தாரா, இரண்டாவது பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவருடன் மீனா, ரெஜினா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்றைய தினம், சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இப்படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. பூஜை நிகழ்விற்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி, படத்தின் முதல் காட்சியை படம் பிடித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஐசரி.கே. கணேஷ் பேசுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை உருவாக்க வேண்டும் என்று ஆர்.ஜே. பாலாஜி முன்மொழிந்தார். எங்களின் குலதெய்வமும் மூக்குத்தி அம்மன்தான், பெயரை கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது, உடனடியாக படத்தை தொடங்கலாம் எனக் கூறினேன். அம்மனாக நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்களின் ஒரே எண்ணமாக இருந்தது. முதல் பாகம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதன் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் அம்மன் குறித்த திரைப்படம் எதுவும் வரவில்லை. இதனால், ஒரு பேன் இந்தியா அம்மன் திரைப்படம் உருவாக்க வேண்டும் என எங்கள் வேல்ஸ் டீம் யோசித்தது. அப்போது எங்கள் மனதில் வந்த ஒரே இயக்குநர் சுந்தர்.சி. அவரை ‘பிரான்சைஸ் கிங்’ என்று சொல்லலாம். ‘அரண்மனை’, ‘கலகலப்பு’ போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சிப் பகுதிகளை வெற்றி படங்களாக வழங்கி வருகிறார்” என்று கூறினார்.

‘மூக்குத்தி அம்மன் 2′ குறித்து அவரிடம் பேசினபோது, ஒரு மாதக் காலம் யோசனை செய்ய நேரம் கேட்டார். அந்த ஒரே மாதத்தில் ஒரு பிரமாதமான கதையை கூறினார். நான் இதுவரை கேட்காத கதையாக இருந்தது. அதன் பிறகு, படத்தின் பட்ஜெட்டை மூன்று விரல்களை காட்டி தெரிவித்துள்ளார். இது மூன்று இலக்க எண்ணிலான பட்ஜெட்டில் மட்டுமே உருவாக்க முடியும், மேலும் இதை பேன் இந்தியா ரிலீஸாக வெளியிட வேண்டும் எனக் கூறினார். தற்போது, மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் அம்மனாக நடிக்க நயன்தாரா ஒரு மாதமாக விரதம் மேற்கொண்டு வருகிறார். முதல் பாகத்திற்கும் அவர் விரதம் இருந்தார். தற்போது, ஒரு வாரமாக அவரது வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவரும் விரதம் இருக்கிறார்கள். நிச்சயமாக, நயன்தாரா இந்தப் படத்தில் அம்மனாக வாழப்போகிறார்” என்று அவர் குறிப்பிட்டார்.