தமிழ் திரைப்பட உலகில் சில நடிகைகள் தொடர்ந்து நடிக்காமல் இருந்தாலும், அவர்கள் நடித்த சில படங்கள் அல்லது கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றன. அத்தகைய நடிகைகளில் ஒருவராக, ‘பருத்தி வீரன்’ திரைப்படத்தில் நடித்த பிரியாமணி, தனது சிறப்பான நடிப்பிற்காக தேசிய விருதை வென்றார். மேலும், பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் நெருங்கிய உறவினராகவும் உள்ளார்.


பிரியாமணி, 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியான ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அவர் மாடலிங் செய்து கொண்டிருந்த காலத்தில், இயக்குநர் பாரதிராஜா அவரைப் பார்த்து, திரைப்பட உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஆனால், இப்படம் தயாராகி இருந்தபோதும் தாமதமாகவே வெளியானது. அதற்கும் முன்பாக, அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘எவரே அலகாடு’ திரையரங்குகளில் வெளியானது.


அமீர் இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் அறிமுக படமாக வெளியான ‘பருத்தி வீரன்’ திரைப்படத்தில், பிரியாமணி கிராமத்து இளம் பெண்ணாக ‘முத்தழகு’ எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது இயற்கையான நடிப்பு, பேச்சுத்தெளிவும், தோற்றமும் காரணமாக, இந்தக் கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பெண்மணிப் பாத்திரங்களில் ஒன்றாக மாறியது.
இந்த வெற்றிக்கு பிறகு, தமிழில் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வாய்ப்புகளை பெறவில்லை. இருப்பினும், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது, நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். அதே நேரத்தில், அவர் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘ஆபீசர்’ இன்று வெளியாகியுள்ளது.