நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதன் பின்னர், இயக்குனர் சாய் பிரபா மீனா, தயாரிப்பாளர் முரளி பிரபாகரன் இணைந்து உருவாக்கும் புதிய திரைப்படத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அண்மையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில், செந்திலுடன் கூல் சுரேஷ், எம். எஸ். ஆரோணி, மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தினை பற்றி இயக்குனர் சாய் பிரபா மீனா விளக்கமளிக்கையில், “ஒரு முக்கியமான நாற்காலியில் அமரப்போகும் தலைவன் யார்?” என்ற போட்டி நான்கு கேங்ஸ்டர் குழுக்களிடையே நடக்கிறது. இறுதியில் யார் வெல்லப் போகிறார்? என்பது தான் கதை. முழுவதும் அதிரடி திருப்பங்களுடன் கூடிய, வணிக ரீதியான ஆக்ஷன் படமாக இதை உருவாக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. மேலும், படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.