தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக விளங்கியவர் பாலுமகேந்திரா. மூன்றாம் பிறை, மூடுபனி, வீடு, சந்தியாராகம் போன்ற தேசிய விருது பெற்ற படைப்புகளை உருவாக்கியவர். அவருடைய திரைப்படங்களை மையமாகக் கொண்டு ஏற்பாடுசெய்யப்பட்ட கருத்தரங்கமும் விவாத அரங்கமும் இரண்டு நாட்கள் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன.


இந்த நிகழ்வின் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், நடிகை ரோகினி, நடிகர் நிழல்கள் ரவி, ராஜநாயகம், அகிலா பாலுமகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ், “தொலைநோக்குடன் திரைப்படங்களை உருவாக்கிய இயக்குனரின் கலைத்திறனை கௌரவிப்பதோடு, எதிர்கால தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களையும், சினிமா ஆர்வலர்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இனிமேல் இது ஆண்டு தோறும் நடைபெறும். பாலச்சந்தர், மகேந்திரன் போன்ற சிறந்த படைப்பாளிகளையும் கொண்டாடும் விதமாக இதுபோன்ற கருத்தரங்குகளும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறும்,” என்று கூறினார்.