நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என திரையுலகில் பல திறமைகளை கொண்டவர் நடிகர் தனுஷ். “ராயன்” படத்தைத் தொடர்ந்து, அவர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியானதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி, பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது. இளைஞர்களின் காதல், உறவுமுறை மற்றும் திருமணம் பற்றிய கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியுள்ளார்.
படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் அருண் விஜய், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர்கள் ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அருண் விஜய், “நடிகர் தனுஷ் ஒரு மல்டி-டாஸ்கர். ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் கூட, அவர் மற்றொரு கதையை எழுதி கொண்டிருப்பார். இன்னொரு நாளில், காரவேனில் அவர் ஜி.வி. பிரகாஷுடன் இசை ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்க்கும் போது மிகுந்த உற்சாகம் அடைகிறேன். அவருடைய அசாதாரண திறமைகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஒரு பாக்கியம்” எனக் கூறினார்.