பாலிவுட்டில் சுமார் 25 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கும் நீல் நிதின் முகேஷ், தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தில் ஒரு கார்ப்பரேட் வில்லனாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் மாதவனுடன் இணைந்து நடித்த ஹைசாப் பராபர் திரைப்படம் கடந்த ஜனவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், தனது புதிய ஹிந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, நியூயார்க் விமான நிலையத்தில் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பார்த்து, அவரை பார்ப்பதற்கு இந்தியர் போல் தோன்றவில்லை என்பதால் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பின்னர், தன் அடையாளத்தை உறுதி செய்ய, நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல், தனது தந்தையும், தாத்தாவும் பிரபல பாடகர்கள் என்பதைக் குறிப்பிட்டார். இதை அதிகாரிகள் கூகுளில் தேடிப் பார்த்தனர். அதன் பிறகு, அவரது தகவல்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தி, நீல் நிதின் முகேஷை விடுவித்தனர்.