இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிஸியாக செயல்பட்டு வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது, ‘கிங்ஸ்டன்’ எனும் தனது 25வது படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.
அப்போது, அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், “அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கமல் சார் மாதிரியான தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால், மேலும் பல தரமான திரைப்படங்களை உருவாக்குவார்கள். அவருடைய வெற்றியை நானும் எதிர்பார்த்தேன்” என்று கூறினார்.
மேலும், “என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கமல் சார் தான் தொடங்கி வைக்க வேண்டும் என விரும்பினேன். இதை அவரிடம் கூறியவுடன், அவர் உடனே ஒப்புக்கொண்டு கலந்து கொண்டு கிளாப் அடித்து வாழ்த்தினார். அவருக்கு என்மீது அன்பும், அக்கறையும் இருக்கிறது. ஒரு சமயத்தில், ஒரு போராட்டத்திற்காக நான் குரல் கொடுத்தபோது, என்னை அழைத்து பாராட்டினார். ‘நீங்கள் மிகவும் தைரியமாக செயல்படுகிறீர்கள். உங்கள் அரசியல் பார்வை எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என்று கூறியுள்ளார்” என ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார்.