பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கோயிலுக்கு வந்தால் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். மனதில் உள்ள பாரம் குறைவது போல் உணர்கிறேன். அம்மனை தரிசிக்கும் போது, அந்த நேர்மறையான எண்ணங்கள் மனதிற்குள் செல்லும். ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்காக இன்று அம்மனை தரிசித்தேன்.

என் ஆரோக்கியம் குறித்து டாக்டரா, கம்பவுண்டரா என்று கூட தெரியாதவர்களிடம் கருத்து கேட்கிறார்கள். இது தவறான விஷயம். மற்றவர்களை பற்றி பேசுவது அநாகரீகம். ஒரு படத்தை பற்றி பேசலாம், ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசக் கூடாது. இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, சிறு பட தயாரிப்பாளர்கள் குறித்து பேசுகையில், “சின்ன படங்களை தயாரிக்க விரும்புபவர்கள் ஆலோசனை கேட்டு வரலாம். தயாரிப்பாளர்களுக்கான வழிகாட்டுதலை ஏற்பாடு செய்யலாம். சிறிய படங்களை வெளியிடுவதில் பல சிரமங்கள் உள்ளன” என்றார்.பெண்கள் பாதுகாப்பு குறித்து கேட்டபோது, “பெண்கள் தற்காப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும். சிலர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், எனவே பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
அதன் பிறகு, தனது அரசியல் பயணம் குறித்து கேட்டபோது, “அரசியல் பயணத்தை பற்றி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், அதைப் பற்றிய கேள்விக்கு, “திரைப்படத் துறையையும் சூதாட்டத்தையும் சேர்த்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது வருத்தமான விஷயமாக உள்ளது. அந்த வரியை மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்ய வேண்டும். இந்தியாவில் தமிழ் திரைத்துறைக்கு மட்டுமே இரட்டை வரி விதிக்கப்படுகிறது—18% ஜிஎஸ்டி, 8% உள்ளாட்சி வரி. மத்திய பட்ஜெட்டில் திரைத்துறைக்கு நல்லது அறிவிக்கப்பட்டால் நிதியமைச்சருக்கு நன்றி சொல்லுவோம்” எனக் கூறினார்.