நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் வருகிற 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் அருண் விஜய், ரோஷினி வெங்கடேஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: “‘வணங்கான்’ என்றால் எதற்கும் வணங்காதவன், அடிபணியாதவன் என்று பொருள். படத்தின் நாயகனும் அவ்வாறான குணாதிசயமுடையவன். அவன் ஒருவேளை மனது வைத்தால் தான் மற்றவர்களுக்கு ஏதாவது அளிக்க மாட்டான். ‘வணங்கான்’ என்பது ஜெயமோகன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு. அவரின் அனுமதியுடன் இந்த தலைப்பை பயன்படுத்தி இருக்கிறேன்.
எந்த கதையையும் நான் முன்னெடுக்கத் திட்டமிடுவது இல்லை. சமூகம் என்னை ஒரு கதையை எழுதும்படி தூண்டுகிறது. ‘இதைக் கண்டும் காணாமல் விடாதே, திரையில் கொண்டு வா’ என்று என் முதுகைத் தள்ளுகிறது. ‘வணங்கான்’ படத்தில் ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெறுகிறது. அது உண்மைச் சம்பவம். அந்த சம்பவத்தை திரையில் கொண்டு வராவிட்டால் நீ சமூகத்தில் வாழ்ந்து பலன் இல்லை என்று என் மனசு கூறியது. இதனால் அந்த உண்மைச் சம்பவத்தைப் படம் ஆக்கியுள்ளேன்.” இவ்வாறு பாலா கூறினார்.