மாநகரத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான “போட்” வரை உள்ள படங்களில் தனக்கென ஒரு தனி பாணியில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காமெடி நடிகர் சாரா. தமிழில் இரண்டு மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தில் தீவிரமாக நடித்து வரும் இவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கைக்கு, அவர் தனது வாழ்க்கைப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி தான் எனது பூர்வீகம். அப்பா ராஜேந்திரன் துணை கலெக்டராக இருந்ததால் புதுக்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்தேன். எனக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். வீட்டில் நான் இருந்தால் எப்போதும் கலகலப்பாக இருக்கும் என என் பெற்றோர் சொல்லுவர். நான் தனியாக ஒரு யூட்யூப் சேனல் துவங்கி மக்களை மகிழ்விக்க நினைத்தேன், ஆனால் இது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சினிமாவில் எளிதில் முன்னேற முடியாது, மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும், ஆயிரத்தில் ஒருவர் தான் வெற்றியடைய முடியும் என அப்பா கூறிய போது, நான் தான் அந்த ஆயிரத்தில் ஒருவன் என்பேன் என உரசினேன். இதனால் சென்னையில் விஸ்காம் படிப்பைத் தேர்வு செய்தேன். அங்கு எனது சகபயணிகள் பலரும் தற்போது பிரபல யூட்யூபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களாக உள்ளனர். விஸ்காம் படிப்பை முடித்த பிறகு, மும்பையில் உள்ள ஒரு எப்.எம். நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாக பணியை தொடங்கினேன். அதன்பிறகு ஒரு ஆர்ட் டைரக்டருக்கு உதவியாளராக சேர்ந்தேன். எனது நண்பர் விஜய் வரதராஜுடன் சேர்ந்து டெம்பிள் மங்கிஸ் யூடியூப் சேனலை துவங்கினோம், அப்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பை உருவாக்கினோம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ படத்தை இயக்கும் போது, என் நண்பரை நடிக்க அழைத்தார். ஆனால், நண்பர் அந்த வாய்ப்பை என்னிடம் தள்ளி விட்டார். இதனால் நான் ‘மாநகரம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றேன். அதன்பின், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் சூரி நடிக்க இருந்தார், ஆனால் அவர் பிற படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
பின்னர், காமெடி டிராக் ஒரு நாள் பகுதியிலே நடிக்கும்படி என்னை ஆதி அழைத்தார். நான் நடித்த காட்சியை பார்த்த இயக்குனர் சுந்தர்.சி, படத்தில் முழுதும் நடிக்கட்டும் என வாய்ப்பு அளித்தார். அதன்பின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனும் படம் எனக்கு பெரிய பிரேக் தந்தது. அதன் பிறகு ‘கோமாளி’, ‘ஓ மை கடவுளே’, ‘போட்’ போன்ற படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. எந்த விதமான கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்க ஆசை உண்டு, ஆனால் காமெடியனாகவே அதிகம் வாய்ப்பு வருகிறது.
எனக்கு மறைந்த நடிகர் ரகுவரனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்த ‘ஜமா’, ‘வாழை’, ‘லப்பர்பந்து’ படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. சில இளைஞர்கள் சினிமாவையே நம்பி வருகிறார்கள். வாய்ப்பு கிடைக்காதபோது அவர்கள் நிலை மோசமாகி விடுகிறது. எனவே, ஒரே நேரத்தில் சினிமாவை மட்டும் நம்பாமல், வேறு ஒரு தொழிலையும் கையில் வைத்துக் கொண்டு சினிமா வாய்ப்பை தேடுவது நல்லது என்றுள்ளார்.