இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி நினோ நடித்து வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது முதல் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிவிழா சந்திப்பு நேற்று நடந்தது. அதில் பேசிய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, ஒரு ஊருக்குள் என்னென்ன இருக்குமோ, அதனை எல்லாவற்றையும் ‘லப்பர் பந்து’ கதையின் மூலம் சொல்லி உள்ளேன். இயக்குநர்கள் ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் சாதி வேறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களது கதைகளில் அந்த வலி கலந்த ஆக்ரோஷம் இருக்கும். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் கருத்து அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அவர்களின் படைப்புகளை மதிக்க வேண்டும். அவற்றை கேட்க வேண்டும்.
ஆனால், சாதி வேறுபாட்டைப் பற்றி நான் வேடிக்கை பார்த்தவன். எனது படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் அனைத்தும் நான் நேரில் பார்த்த அனுபவங்கள். எனது அனுபவத்தில் இருந்து பெற்றவை என்பதால், நான் அவற்றைப் பற்றி ஆழமாக பேசவில்லை. அதோடு, அந்த விவரங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.
அதே நேரத்தில், அந்த விவரம் கதைக்குத் தேவையானதல்ல. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் கொண்டிருந்த தவறான கண்ணோட்டத்தை இப்போது மாற்றிக் கொண்டுள்ளேன். என்னிடம் ஏற்பட்ட மாற்றத்துக்கு பிறகே இதை சொல்லியுள்ளேன். தவறுகளை திருத்திக் கொண்டு, முதலில் நாமே சரியாக இருக்கிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும்” என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து விளக்கமளித்துள்ளார்.