நடிகர் ரஜினிகாந்தின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் “வேட்டையன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், விரைவில் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் “கூலி” படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மலையாளத்தில் உருவாகி ரூ. 175 கோடி வசூல் செய்த “2018” படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், ரஜினிகாந்துக்கு கதை கூறியுள்ளதாகவும், இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஜூட் ஆண்டனி ஜோசஃப், லைகா நிறுவனத்திற்காக தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் இருந்தது. ஆனால், தற்போது வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் ஜூட் ஆண்டனி மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது என்ற செய்தி பரவியுள்ளது.