தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இடையே தற்போதைய சூழ்நிலையில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. சமீபத்தில், தனுஷ் மற்றும் ஐந்து நடிகர்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து முன் பணம் பெற்றுக்கொண்டபின் நடிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றும், பல்வேறு பிரச்சினைகளுக்காக முழு வேலை நிறுத்தம் நடத்தவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. நடிகர் சங்கம் இந்த முடிவை எடுத்தது தவறு என்று பதிலளித்தது.

இதற்கிடையில், இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கம் நேற்று தலைவர் நாசர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், விஜய்சேதுபதி, ஆர்யா, பிரசாந்த், விஜய் ஆண்டனி, தியாகராஜன், சிபிராஜ், கவுதம் கார்த்திக், ராஜ் கிரண், யோகிபாபு, நடிகைகள் லதா, ரோகிணி, கோவை சரளா, குட்டி பத்மினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள திரைப்பட வேலை நிறுத்தம், நடிகர் நடிகைகள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த உறுதியான முடிவும் எடுக்காமல் கூட்டம் கலைந்தது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.