சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தனது முதல் படத்திலே ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார். இதையடுத்து தற்போது இந்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவரும் ‘மகாராஜ்’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஷாலினி பாண்டே, தனது ஆரம்பக் காலத்தில் ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில் நடிக்கும்போது, தான் உருவக் கேலிகளுக்குள்ளனதாக வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

இதுபற்றி பேசியிருக்கும் அவர், “இப்போது நான் ஃபிட்டாக இருக்கிறேன். ஆனால், ஆரம்பக் காலத்தில் என் உடலை வைத்து நிறைபேர் கேலிகள் செய்தனர். அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடிக்கும் போதும், அதற்குப் பிறகும் நிறைய உருவக் கேலிகளை நான் எதிர்கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் அதிக எடை கொண்டிருந்தேன். அதனால், பலரும் என்னை உருவக் கேலி செய்தார்கள். ஃபிட்னஸ் என்பது உடல் ஆரோக்கியத்துடன் சமந்தப்பட்டது, உடல் தோற்றத்துடன் சமந்தப்பட்டதல்ல” என்று கூறியிருக்கிறார்.


மேலும், “இந்தி தெரிந்த நான், தென்னிந்தியா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு அந்தந்த மாநில மொழிகள் தெரியவில்லை. இதை என் மேனேஜர் தவறாகப் பயன்படுத்தி சில விஷயங்களைச் செய்து என்னை ஏமாற்றினார். அந்தச் சமயத்தில் என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் நமக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது.” என்று பேசியிருக்கிறார்.