கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கினை மையமாக வைத்து உருவான திரைப்படம் “2018”. இதில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட பிரபல மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர்.


இடுக்கி அணை திறக்கப்பட்ட போது ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இளைஞர்கள் மற்றும் மீனவர்கள் எவ்வாறு உதவியிருந்தனர் என்பதை துல்லியமாக படம் பிடித்து காட்டியிருப்பார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப். கேரளாவில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் மிக விரைவாக ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃபின் அடுத்த படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்தன. இப்போட்டியில், லைகா நிறுவனம் முன்வந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நிவின் பாலி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூட் ஆண்டனி மோகன்லால் மற்றும் சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் என்றும் இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.