மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் விக்ரத்தின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமடான்’ திரைப்படம், வரும் அக்டோபர் 17ம் தேதி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி மற்றும் ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் குறித்து, “தைரியமும் உறுதியும் நிரம்பிய ஒரு விளையாட்டு வீரனின் ஆழமான பயணத்தைச் சொல்வதற்காக இப்படம் உருவாகியுள்ளது” என படக்குழு தெரிவித்துள்ளது.

உண்மையில், இது தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம். இவர் தூத்துக்குடி மாவட்டம் மணத்தி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருடைய வாழ்க்கையில் பெரும்பாலான காலம் போராட்டங்களுடன் இருந்தது. கடுமையான முயற்சியின் மூலம், அவர் தேசியம் மற்றும் ஆசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றார். பின்னர் மின்வாரியத்தில் பணியமர்ந்து, அவரது சாதனையை மதித்து இந்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது வழங்கியுள்ளது.
‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் சிறுவயது மணத்தி கணேசனாக நடித்துள்ளார். இவரது பயிற்சிக்கு மணத்தி கணேசனே நேரில் தென் மாவட்டத்தில் வழிகாட்டியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் வெள்ளப் பாதிப்பால் சிக்கியபோது, அந்தப் பகுதியில் எம்பியாக இருந்த கனிமொழியிடம் கணேசன் உதவி கோரி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.