நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராமநாதபுரம் கடலோரப் பகுதியையும், பாய்மர படகுப் போட்டியையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய சூரி, தனக்கு இன்று கிடைக்கும் விசில் மற்றும் கைத்தட்டல் அனைத்திற்கும் இயக்குநர் வெற்றிமாறன்தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தான் இதுவரை வளர்ந்து வந்ததற்கும், இனி மேலும் முன்னேறுவதற்கும் வெற்றிமாறனின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் கூறினார். மேலும், ‘மண்டாடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சவாலானதாக இருந்ததாகவும் சூரி தெரிவித்தார். ரிஸ்க் நிறைந்த கதையை படமாக எடுத்துள்ளதாக கூறிய அவர், ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கியிருக்க முடியாது என்றும் நன்றி தெரிவித்தார்.
தனது குடும்பத்தினரின் ஆதரவு குறித்தும் மேடையில் உருக்கமாக பேசிய சூரி, தனது தாயாரை மேடைக்கு அழைத்து வந்தார். ஒருகாலத்தில் ரூ.300 வாடகை செலுத்துவதற்குக்கூட பணமின்றி கஷ்டப்பட்டதாகவும், இன்று தனது மகனுக்காக ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்படுவதைப் பார்த்து தாய் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து ‘மண்டாடி’ படத்தின் தலைப்பை பலரும் சரியாக உச்சரிக்காமல், ‘மன்றாடி’, ‘மண்ணடி’, ‘மந்தைவெளி’ என மாற்றிக் கூறியதாக சூரி கலகலப்பாக தெரிவித்தார். மேலும், ‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுதான் இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்க தனக்கு வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
