‘பிரேமலு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. உருவாக்கி வந்தார். ஆனால், கதையில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி ஏற்படாததால் அந்தப் படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படமாக ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெளியாகியுள்ளது. நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிவின் பாலி, மமிதா பைஜு ஆகியோருடன் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் தொடக்க வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் முதல் 3 நாட்களில் ரூ.63 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இப்படம் விரைவில் ரூ.100 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ் ரசிகர்களுக்கான வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி தமிழில் திரையரங்குகளில் வெளியாகிறது.
