‘பூத் பங்களா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள புதிய திரைப்படம் ‘வெல்கம் டு தி ஜங்கிள்’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் திரைப்படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்ஷய் குமார் மனம் திறந்து பேசினார். அப்போது, ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ திரைப்படத்தில் உங்களை உற்சாகப்படுத்திய விஷயம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த திரைப்படத்தில் இடம்பெறும் கட்டுப்பாடற்ற நகைச்சுவை மற்றும் கலாட்டாதான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கே உரிய தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். நகைச்சுவை என்பது நான் மிகவும் ரசித்து செய்யும் ஒரு வகை. ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ அந்த பொழுதுபோக்கு அனுபவத்தை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இதில் வேடிக்கை, ஆச்சரியம், அதிரடி மற்றும் சிரிப்பு அனைத்தும் நிறைந்திருக்கும்.
மக்களை சிரிக்க வைப்பது மிகவும் கடினமான பணிகளில் ஒன்றாகும். திரையில் நாம் செய்யும் ஒரு விஷயத்தால் ரசிகர்கள் தங்களது கவலைகளை மறந்து மனதார சிரிக்கும்போது, அது மிகப்பெரிய மனநிறைவை தருகிறது. நகைச்சுவை திரைப்படங்கள் என் திரைப்பயணத்தில் மறக்க முடியாத பல தருணங்களை எனக்கு வழங்கியுள்ளன” என்று கூறினார்.
