தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக அதர்வா திகழ்கிறார். ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது நடிப்பிற்காக நல்ல வரவேற்பையும் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன் மற்றும் நிஹாரிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அதர்வா மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் வரும் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.முன்னதாக, அதர்வாவின் தந்தையும் மறைந்த பிரபல நடிகருமான முரளி ரசிகர்களால் அன்புடன் ‘இதயம் முரளி’ என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது அந்தப் பெயரையே திரைப்பட தலைப்பாக வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
