இயக்குனர் ஏஎல்.விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காதல் ரீ செட் ரிப்பீட்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாலா கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பாலா, நான் விஜய்க்கு குரு என்று கூறியிருக்கிறீர்கள்; அது முற்றிலும் தவறு. எல்லாவிதத்திலும் எனக்கே விஜய் குருவாக இருக்கிறார். வயதில் என்னைவிட இளையவராக இருக்கலாம்; ஆனால் கடுமையாக உழைக்க வேண்டிய விதத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான். ஒரே சொல்லில் கூற வேண்டும் என்றால், அவர் எனக்கு தாயுமானவன். என் வாழ்க்கையின் நல்லதும் கெட்டதுமான அனைத்து தருணங்களிலும் முதல் நபராக இணைந்து நிற்பவர் விஜய். அவர் எப்போதும் நலமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது போலவே, நான் நலமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பதும் நூறு சதவீதம் உண்மை” என்று மனம்விட்டு பேசினார்.
மேலும் அவர், “இந்தப் படத்தின் டிரெய்லரில் ‘நிம்மதியாக தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும்’ என்ற வசனம் வருகிறது. தூங்கினால் பிரச்சினைகள் சரியாகலாம்; ஆனால் தூங்காமலேயே கடினமாக உழைக்கும் மனிதர் என்றால் அது ஏ.எல். விஜய்தான். நடிகை விஜியை நான் இப்போது தான் நேரில் பார்க்கிறேன். நான் உங்கள் ரசிகன். ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உங்கள் கண்களின் மூலம் வெளிப்பட்ட உணர்ச்சி அபாரமாக இருந்தது. எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்; அதற்குப் பிறகு மிகவும் பிடித்த நடிகை நீங்கள் தான்” என்று பாராட்டினார்.
