நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், “தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை” என்ற தமிழக அரசின் தீர்மானத்தை மாணவர்களின் மத்தியில் வரவேற்றார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய நடிகர் விஜய், கடந்த ஆண்டில் தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை கவுரவித்து வருகிறார். இந்த ஆண்டும் அதே போல மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நிகழ்ச்சி கடந்த 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இன்று (ஜூலை 3) இரண்டாம் கட்டமாக நடந்த நிகழ்ச்சியில் 17 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டனர். வந்துள்ள இளம் சாதனையாளர்களுக்கு வணக்கம். இன்னும் எதுவும் பேச வேண்டாம் என நினைத்தேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பேச வேண்டியுள்ளது, அதுவே நீட். நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

1975க்கு முன் மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய அரசு (விஜய் பேசுகையில் ஒன்றிய அரசு என குறிப்பிட்டார்) பொதுப் பட்டியலில் சேர்த்தது தான் முதல் பிரச்னை. ஒரே நாடு, ஒரே கல்வி பாடத்திட்டம் என்பது கல்விக்கு எதிரான பிரச்னையாக நான் பார்க்கிறேன். மாநிலத்திற்கு ஏற்றபடி கல்வித்திட்டம் இருக்கும். பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத சொன்னால் எப்படி? இது கடினமான விஷயம்.தமிழக அரசுக்கு ஆதரவு: நடைபெற்ற நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை பார்க்கும்போது, நீட் தேர்வின் நம்பகத்தன்மையே மக்கள் மத்தியில் போய்விட்டது. “நீட் தேர்வே வேண்டாம்” என்பது மக்களின் மனநிலை. இதற்கு ஒரே தீர்வு நீட் விலக்கு. தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் விலக்கு தீர்மானத்திற்கு முழு மனதாக வரவேற்கிறேன்.



தீர்வுக்கு என்ன வழி: இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அதில் சட்ட சிக்கல்கள் இருப்பின் சிறப்பு பொதுப்பட்டியலில் ஒன்றை உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். அதில் மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். மத்திய கல்வி நிறுவனங்களுக்கு தேவை என்றால் நுழைத்தேர்வு நடத்திக் கொள்ளட்டும். மாநில வாரியாக கல்விமுறையில் மாற்றம் இருக்கும். அதற்கு ஏற்றபடி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.

வெற்றி நிச்சயம்: மாணவர்கள் நிம்மதியாக படியுங்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். இந்த உலகம் மிக பெரியது. வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒன்று போய்விட்டால் இன்னொன்று கிடைக்கப்போகிறது. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.”