தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இது தனுஷின் 51-வது படமாகும். இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இதில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா செய்தியாளர்களிடம் பேசியபோது, “நீங்கள் அனைவரும் எனக்கு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறீர்கள். ‘தமிழ் படங்களில் அதிகமாக பார்க்க முடியவில்லை’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். நானும் அந்த வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் நல்ல ஒரு கதை கிடைத்தால் உடனடியாக ஓடி வந்துவிடுவேன்.
‘கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க விருப்பமா?’ என நீங்கள் கேட்கிறீர்கள். எனக்கு கதைதான் முக்கியம். நல்ல கதை இருந்தால் அதை மொழி என்கிற அளவில் பிரிக்கவே மாட்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழியாக இருந்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. அதுபோல, பான் இந்தியா, ரீஜினல் என்றெல்லாம் வேறுபடுத்திக் கொள்ளும் பழக்கம் எனக்கு இல்லை. கதை நன்றாக இருந்தாலே போதும், நடித்துவிடுவேன்,” என தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்.