2007ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படம் ‘சென்னை -28’ ஆகும். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு அவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர், ‘சரோஜா’ மற்றும் ‘கோவா’ போன்ற படங்களை இயக்கிய அவர், பின்னர் அஜித் நடிப்பில் ‘மங்காத்தா’ படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைய, 2016ஆம் ஆண்டு, தனது முதல் படமான ‘சென்னை -28’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட் பிரபு.

இந்நிலையில், ‘மாநாடு’, ‘கஸ்டடி’, ‘கோட்’ படங்களை தொடர்ந்து, தற்போது ‘சென்னை -28’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

முதல் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோர் இந்த மூன்றாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.