நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். துடுக்கான கதாபாத்திரங்களிலும் அமைதியான தோற்றத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தவர், அசுரன் படத்தில் கத்தரிப்பூவழகி பாடலின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். தற்போது, ‘ஜமா’ திரைப்படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தைப் பற்றி நடிகை அம்மு அபிராமி பேசியபோது, “எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது.

இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு அது ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் மூலம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

ஜமா வில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பரி இளவழகன் இயக்கியுள்ளார். ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். ‘ஜமா’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.