மலையாள திரைப்படத் துறையில் துணை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய ஜோஜூ ஜார்ஜ், பின்னர் குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து உயர்ந்தவர். கடந்த ஆண்டு ‘பணி’ என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குநராகவும் மாறினார். மலையாளத்தையும் தாண்டி, தமிழில் ‘ஜகமே தந்திரம்’, ‘ரெட்ரோ’, சமீபத்தில் ‘தக் லைப்’ போன்ற படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதற்கு முந்தையதாக 2021-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சுருளி’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தை வித்தியாசமான கதைக்களத்திற்காக பெயர் பெற்ற இயக்குநர் லிஜோஸ் பெல்லிசேரி இயக்கியிருந்தார்.

இந்த படம் வெளியான போது, அதில் பயன்படுத்தப்பட்டிருந்த கொச்சையான வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் ஜோஜூ ஜார்ஜ் தனது வருத்தத்தைக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், “இந்த படத்தில் வசனங்கள் ராவாக, கொச்சையாகவே எழுதப்பட்டிருந்தன. ஆனால் விருது விழாக்களில் படத்தை அனுப்ப வேண்டும் என்பதற்காக இயல்பான வசனங்களாகவே காணப்படும் எனவும், திரையரங்குகளில் வெளியிடும் போது அவை நீக்கப்படும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நம்பிக்கையிலேயே இருந்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக படம் தியேட்டர்களில் வெளியானபோது அந்த வசனங்கள் நீக்கப்படாமல் இருந்தன. என் சொந்த ஊரில் கூட மக்கள் என்னை கேள்வி கேட்கத் தொடங்கினர். அது மட்டுமல்லாமல், இந்த படத்துக்காக நான் வாங்கவேண்டியிருந்த சம்பளத் தொகையும் இன்னும் முழுமையாக தரப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.