சுபலட்சுமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே. முருகன் தயாரித்துள்ள திரைப்படம் ‘உழவர் மகன்’. இந்தப் படத்தை, தோனி கபடிகுழு மற்றும் கட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய ப. ஐயப்பன் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக கௌஷிக் நடித்துள்ள இந்தப் படத்தில், நாயகிகளாக சிம்ரன் ராஜ் மற்றும் வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். இந்த இருவரும் இந்த படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமாகின்றனர். மேலும், விஜித் சரவணன், யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றிப் பேசும் போது, இயக்குநர் கூறியது: “இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் நிலையில் இருப்பது விவசாயம். தொழிலுக்கு உறுதியான ஆதாரமில்லாமல் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் நாளும் துன்பங்களும் துயரங்களும் அனுபவித்து வருகிறார்கள். இப்படி விவசாயிகள் சந்திக்கும் சிக்கல்களையே இந்த படம் பேசுகிறது.
வாழ்க்கையின் அடிப்படையாக இருக்கும் விவசாயத்தை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும்? அதை வளர்க்கும் வழிகளும், அதன் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் காரணங்களும் என்ன? ஆகியவற்றைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது. விவசாய மண் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகளை விவரிக்கின்ற இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையும் அடங்கியுள்ளது. இந்தப் படத்தை ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்,” என தெரிவித்தார்.