விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகர் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மற்றும் வராகி அம்மன் கோவிலுக்கு, நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சம் மதிப்பில் எந்திர யானை ஒன்றை வழங்கியுள்ளனர். இந்த எந்திர யானையின் உயரம் 3 மீட்டர் மற்றும் எடை 800 கிலோ. உண்மை யானையைப் போலவே பிரமாண்டமாகவும், அழகாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு ‘கஜா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த எந்திர யானை கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டு, இயற்கை யானையைப் போலவே தோற்றமளிக்கின்றன. சக்கரங்களின் உதவியுடன் இந்த யானையை வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சுவாமி ஊர்வலங்களில் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எந்திர யானை காதுகள், தும்பிக்கை மற்றும் தலையை அசைக்கும் திறனும் கொண்டது. பக்தர்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும் வசதியும் இதில் உள்ளது.
இந்த எந்திர யானையின் அறிமுக நிகழ்வு கோவிலில் மேளதாள ஒலியுடன் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, அந்த யானையை நகரின் முக்கிய வீதிகளில் கொண்டு சென்றபோது பொதுமக்கள் மலர்கள் தூவி அதனை வரவேற்று உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.