ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. பேண்டஸி காமெடி த்ரில்லர் வகையில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என இயக்குநர் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த அதே ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் நடிகர் ஆதி, ‘மரகத நாணயம்’ பட இயக்குனருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில், நிக்கி கல்ராணி மற்றும் ஏ.ஆர்.கே.சரவணனும் இணைந்து இருந்தனர். அதனுடன், “மரகத நாணயம் 2” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக எதிர்பார்க்கிறேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ‘மரகத நாணயம்’ திரைப்படம் 8 ஆண்டுகள் பூர்த்தி செய்ததை முன்னிட்டு, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.