தமிழ் திரைப்பட உலகில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதனைத் தொடர்ந்து அவர் ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது அவர் ‘ஓ மாம்பழ சீசனில்’, ‘ஆர்யன்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இதன் மூலம் ராம் குமாருடன் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார்.சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு “இரண்டு வானம்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது. திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக நடைபெற்று வந்தன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்தச் சூழலில், நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்தப் படத்தை பற்றிய ஒரு புதிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி, ‘இரண்டு வானம்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வரும் நாட்களில் இந்தப் படத்தைச் சுற்றியுள்ள மேலும் புதிய அப்டேட்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.