மலையாள சினிமாவில் மோகன்லால் மற்றும் மம்முட்டியை போல் முன்னணி நடிகராக நீண்ட காலமாக திரைத்துறையில் வலம்வருபவர் வந்தவர் சுரேஷ் கோபி. கடந்த பத்து ஆண்டுகளில் அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து, அரசியல் துறையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தேசிய அளவில் செயற்படுகின்ற பாஜக கட்சியில் இணைந்து கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மத்திய இணை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.

அரசியலில் ஈடுபட்ட பிறகு சுரேஷ் கோபி சிறு இடைவெளிகளில் சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். ஆனால் அவை அவரது அரசியல் பணிகள் காரணமாக தாமதமாகவே திரைக்கு வந்தன. மேலும், அவை பெரிதளவில் வரவேற்பைப் பெறவும் தவறின. இந்நிலையில், அவர் தற்போது ‘ஜேஎஸ்கே’ மற்றும் ‘ஒத்தக்கொம்பன்’ என்ற இரண்டு படங்களில் நடித்துவருகிறார். இதில், ‘ஜேஎஸ்கே (ஜானகி V/s ஸ்டேட் ஆப் கேரளா)’ என்ற படம் வருகிற ஜூன் 20ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நீதிமன்ற பின்னணியைக் கொண்டதொரு வழக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொருவரும் சட்டம் அவர்களுக்கு என்ன உரிமைகளை வழங்குகிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உண்டு என்பதை முன்வைக்கும் நோக்கில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. “உண்மைக்காக நடத்தும் யுத்தத்தில் ஒவ்வொரு வார்த்தையும் ஆயுதமாக மாறுகின்றன” என்ற டேக்லைனுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரவீன் நாராயணன் இயக்கியுள்ளார். மேலும், சுரேஷ் கோபியின் மகன்களில் ஒருவரான மாதவ் சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.