சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள “நந்தன்” படத்தை பாராட்டி, இயக்குநர் கோபி நயினார் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அவர் பதிவில் கூறியதாவது, “இந்தியாவில் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டிருக்கும் சனநாயக உரையாடலான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்மையான திரைக்கதையின் வழியாக தன் சொந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது ‘நந்தன்’.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், நடித்தவர்களெல்லாம் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வுள்ளவர்களாக இருந்தது. குறிப்பாக, இயக்குநரும், நடிகர் சமுத்திரக்கனியும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். “இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள், இந்தியாவில் ஜாதி இருக்கிறது” என்று காட்டுகிறேன் என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது.
சனநாயகத்தை மதிக்கும் இயக்குநர் இரா.சரவணனின் தைரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் குறைவில்லை. இந்த படம் நந்தன் எனும் தேரை தன் முதுகில் சுமந்துவந்தது போன்றது. சசிகுமாரும் அந்த தேரை கொண்டு வந்தார். இதுவரை பல தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நுழைய அனுமதிக்கப்படாமல், நாற்காலியில் அமர முடியாமல், சமூகத்தின் மூலமாக தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களது சார்பாக, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதல்வரிடம் பணிவான வேண்டுகோள். இந்த படமானது சமூக நீதியைப் பற்றி பேசும் படமானதால், தமிழ்நாடு அரசின் உயரிய கலை விருதை ‘நந்தன்’ படத்திற்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும், உறுப்பினர்களும் இந்த படத்தை கண்டு சமூக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால், தமிழ்நாடு அரசு அதற்கான அறிவுறுத்தலை வெளியிட வேண்டும். மேலும், ‘நந்தன்’ படம் ஒரு சனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படமாக இருப்பதால், இளம் தலைமுறையினருக்கும் மாணவ-மாணவியருக்கும் போய் சேரவேண்டும் என்பதால், பள்ளிகளில் ஆசிரியர்கள் வழியாக இந்த படத்தை காணும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றுள்ளார்.