திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 2002-ம் ஆண்டு வெளியான “மவுனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும், தமிழ் சினிமாவில் அவருக்கு தனித்துவமான ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. தற்போது, “தக் லைப்”, “குட் பேட் அக்லி”, “விஸ்வம்பரா” ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு சினிமாவிலும் பிசியாக பணியாற்றி வரும் திரிஷா, நடித்துள்ள ஒரு தெலுங்கு படம் உலக சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, தொலைக்காட்சியில் அதிக முறை ஒளிபரப்பான படம் என்ற சாதனையை அந்த திரைப்படம் செய்துள்ளது. அதாவது, “அத்தடு” திரைப்படம் இதுவரை 1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.
உலகளவில் எந்த திரைப்படமும் இதனைப் போல் அதிகமுறை ஒளிபரப்பானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபுவுடன் திரிஷா நடித்த இப்படத்தில், பிரகாஷ் ராஜ், சோனு சூட், நாசர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “அத்தடு” திரைப்படம் இத்தனை முறை ஒளிபரப்பானது என்பதால் திரிஷாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர்.