தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நஸ்ரியா, நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்த பின் நடிப்பிலிருந்து விலகினார். இடையே சில நேரங்களில் நடித்தாலும், கடந்த ஆண்டு தெலுங்கில் நடிகர் நானியுடன் இணைந்து ‘அண்டே சுந்தரானிக்கி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 47வது படத்தில் நாயகியாக நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சூர்யா ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கும் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியானதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், சூர்யா அடுத்ததாக ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கூட்டணியைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கிறார் என்றும், இப்படத்தில் நஸ்ரியா நாயகியாக இணைந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.