Friday, April 12, 2024

“சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு தொல்லை” – நடிகர் விஷாலைக் கண்டித்த நடிகை காயத்ரி ரகுராம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒரு மாணவியை சினிமாவுக்கு அழைத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

“ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குஷ்பு உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் வற்புறுத்தினர். நடிகர் விஷாலும் இதனை கண்டித்திருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலை குனிய வைப்பது மட்டுமன்றி அந்த பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் யாரும் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. இந்த குற்றத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்றார்.

விஷாலுக்கு இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்து நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார்.

அந்தச் செய்தியில், ”முதலில் சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களையும் கண்டியுங்கள். சினிமாவில் புதிதாக வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். முன்னணி நடிகைகளுக்கும் தொல்லைகள் கொடுக்கப்படுவதை பாருங்கள். உங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சினிமா துறையில் உதவி தேவைப்படும் பெண்களுக்காக உங்கள் வீரத்தை காட்டி இருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்தத் திடீர் தாக்குதல் தமிழ்த் திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Read more

Local News